Thursday, January 12, 2012


துன்பங்களிலிருந்து விடுபட, நமது சித்தர்களும் ஞானிகளும் சொல்லிப்போன வழிகள் ஏராளம். பாதிப்புகள் தவிர்க்க முடியாதவை. அந்த பாதிப்புகளைத் தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மை, பயிற்சியின் மூலமும் அனுபவங்களின் மூலமும் வரும். எல்லா துன்பங்களுக்கும் மூலமிருக்கிறது. ஏதோ ஒன்றின் தொடர்ச்சியே அது. அது போன ஜன்மத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம், இப் பிறப்பில், ஒரு கட்டத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்கு எதிரொலியாகவும் இருக்கலாம். காலிலே முள் குத்துவதற்குக்கூட உனக்கு விதிக்கப்பட்ட விதி காரணமாக இருக்கிறது. எல்லா துன்பங்களுக்கும் விதி காரணமென்றால் நிடிலயானதும் நிரந்தரமான அந்த விதி, பிரார்த்தனையின் மூலம் எப்படி மாறிவிடும்? என்று ஒருவர் கேட்கிறார். ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தை அணை கட்டி நிறுத்துவதுபோல், பிரார்த்தனை துயரங்களை நிறுத்துகிறது. இயற்க்கையாகவே அது ஒரு மனசாந்தியை உண்டாக்குகிறது. துன்பம் ஓரளவு குறைந்தாலும், பிரார்த்தனை பலனுள்ளதாகத் தோன்றுகிறது. நீங்கள் நம்பும் ஒரு மருத்துவர் மருந்துக்கு பதிலாக வெறும் தண்ணீரையே ஊசிமூலம் ஏற்றினுலும் நோய் குறைந்துவிட்டதுபோல உனக்குத் தோன்றுகிறது. அது தோன்றுவதான் முக்கியம். அது தோன்றுவதற்கு நம்பிக்கைதான் பிரதானம்.
                     மருந்துபாதி, மனநம்பிக்கைபாதி
பிரார்த்தனை பாதி, நம்பிக்கைபாதி
                     நம்பிக்கையோடு பிரார்தித்தால், விதியின் வேகம் குறைந்துவிட்டதாக உனக்கே தோன்றுகிறது. விரோதித்துநின்ற விதி, ஒத்துழைப்பதாகவும் தோன்றுகிறது. கடவுளை நம்வினோர் கைவிடப்படார்  என்று, ஒரு வரியில் சொல்லிவைத்தார்கள் நம் முன்னோர்கள். இன்பமும், நிம்மதியும் நட்பிக்கையில்தான் தோன்றுகின்றன. துன்பங்களை களைவதற்கு நம்பிக்கையே முக்கியம். ஏதோ கஷ்டம் வந்துவிட்டது. கோவிலுக்குப் போய் வருவோம் என்று போய் வருவதில் அர்த்தமில்லை. நம் அறிவானது ஒரு சக்தியின் மீது லயித்து நம்பிக்கை உதயமாக வேண்டும். அதற்குப் பகுத்தறிவு தேவையில்லை. இந்த தெய்வம் நம்மை காப்பாற்றும் என்று உனக்கே தோன்றி, அந்த லயத்தில் நம்பிக்கை பிறக்க வேண்டும்.
            உலகத்தில் பகுத்தறிய வேண்டிய விக்ஷயங்கள் சில உண்டு. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. மனைவியின் உள்ளத்தை நீ பகுத்தறிய முயலலாம். உடலைப் பகுத்தறிய முயன்றால், அவள் அழகு தெரியாது, எலும்பும் சதையுந்தான் தோன்றும். ஸ்தூலங்களைப் பகுத்தறிய முயன்றால், அவை வெறும் கல்லும் செம்புமாகத் தோன்றும். ஸ்தூலங்களின் சக்தியை பகுத்தறிய முயன்றால், நம்பிக்கையும், அவநம்பிக்கையும் மாறி, மாறி தோன்றும். அப்படியே ஏற்றுக்கொண்டால், அந்த சக்தி நம்மை ஆகர்ஷிக்கும். நம்பிக்கை கொண்டவர்களை அந்த சக்தி எப்படியும் ஒரு கட்டத்தில் வாழவைக்கும். மனிதனின் பலவீனமான மனத்தை அறிந்துதான் இந்துக்கள் நம்பிக்கையோடு வழிபடுவதை  வற்புறுத்தினார்கள்.                           ஆகவே, பிரார்த்தனையே ஒரு யோகமாகவும் பயிற்சியாகவும் கொண்டு, நம்பிக்கையை வளர்த்துக் கொண்டே வந்தால், துன்பங்கள் விலகாவிடினும், அவற்றைப் பற்றிய பயம் நீங்கி, நிம்மதி ஏற்பட்டுவிடம்.
நெஞ்சுக்கு நிம்மதி.
ஆண்டவன் சந்நதி!
         -கண்ணதாசன்.

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff