Monday, September 23, 2013




ஒருவரிடம் நட்புப் பாராட்டும் போது சில சில விதிகளை பின்பற்றினாலோ அல்லது பிணக்குகள் வரும்போது நினைவில் கொண்டாலோ சுமுகமான, நன்மை பயக்கும் நட்பு நிலைக்க உதவும்.

11.       ஆருயிர் நண்பர் கூட ஒரு காலத்தில் முன் பின் தெரியாதவராகத்தான் இருந்தார்.

22.       உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களே உங்கள் நண்பர்.


33.       யாருக்காவது நண்பராக இருக்க போகிறீர்கள் என்றால் நல்ல நண்பராக இருங்கள்.

44.       ஒருபோதும் தானே முன்வந்து ஆலோசனைகள் சொல்லாதீர்கள்.


55.       உண்மையை நேசிக்கக்கூடிய நண்பர்களையே வைத்துக் கொள்ளுங்கள்.

66.       தள்ளுபடி செய்யத் தயாராக இல்லை என்றால் கடன் கொடுக்காதீர்கள்.


77.       நண்பருடைய துணைவரை ( நண்பரை ) பிடிக்கவில்லையா..? ரொம்பக் கஷ்டம்தான்.

88.       அடுத்தவரை நோக்கி ஒரு விரல் குற்றம் சாட்டினால் உங்களை நோக்கி மூன்று விரல்கள்.


99.       நட்பு மாறும்.

110.   கசந்த மனநிலை யாருக்கும் உதவாது.



Friday, September 20, 2013





ஜாதகப் பொருத்தம் எவ்விதம் பார்க்கவேண்டும் என்பதை பூர்வபாராசர்யம் என்ற புராதன ஜோதிட நூல் விளக்கியுள்ளது.
பிள்ளையின் ஜாதகத்தில் முதலில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியது, பிள்ளையின் ஜெனனகால லக்கினத்தைதான்! ஜெனன கால லக்கினத்திலிருந்து, அவர் பிறந்துள்ள குடும்பம், அவர் வளர்ந்துள்ள பின்னணி ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம். ஒழுக்கமும், கட்டுப்பாடும், தெய்வபக்தியும் உள்ள குடும்பமா, இல்லையா என்பதை லக்கினம் எடுத்துக்காட்டும்.

இரண்டாவதாக, லக்கினத்திலிருந்து 5-ம் இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானம். பூர்வ புனிய ஸ்தானம் சுப்பக்கிரகங்களின் ஆதிபத்தியத்தில் இருந்தாலும், சுபக்கிரகங்களால் பார்க்கப் பட்டாலும், சுபகிரகங்கள்  அமர்ந்திருந்தாலும், வரம் முற்பிறவிகளில் பல புண்ணிய காரியங்களைச் செய்து, அந்த பழங்களுடன் பிறந்திருப்பது தெரியும். திருமனத்திருக்குப் பிறகு, வாழ்க்கையில் சோதனைகள் ஏற்பத்தும்போது இந்த பூர்வ புண்ணியம் கைக்கொடுக்கும். ஆதலால் வரனின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எப்படியிருக்கிறது என்பது பற்றி ஆராய வேண்டும்.
மேலும், குழந்தைகள் பிறப்பது, அக்குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர்வது ஆகியவற்றையும் இந்த பூர்வ புண்ணிய ஸ்தானம்தான் நிர்னைக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக களத்திர, சயன ஸ்தானமாகிய 7-ம் இடம், இது கணவர்-மனைவியிடையே ஏற்படும் தாம்பத்திய உறவை எடுத்துக்காட்டும் இடமாகும். பரஸ்பர பிணைப்பும், ஒருவர்மீது ஒருவர்க்கு ஏற்படும் அன்னியோநியத்தையும் இந்த 7-ம் இடமே நிர்ணயிக்கிறது.
கடைசியாக உடல்நலம், ஆயுள் ஆகியவற்றை குறிக்கும் 8-ம் இடம் (அஷ்டம ஸ்தானம்). பெண்களுக்கு இந்த 8-ம் இடமே மாங்கல்ய ஸ்தானமும் ஆகிறது.

ஆதலால், ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, லக்கினம், லக்கினத்திலிருந்து 5,7,8 ஆகிய நான்கு இடங்களையும் ஆராய்ந்து பார்த்தபின்பே மற்ற பொருத்தங்களை பார்த்து, வரனை நிச்சயிக்க வேண்டும். 
            

Saturday, September 14, 2013






உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு தகரவர்க்கப் பாடல். முற்றிலும் என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. ஏகாக்ஷரப் பாடல்என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே வில்லி பாரதம்என்று வழங்குகிறது.


பாடலைப் பார்ப்போம்:

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.

திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்தஎன்னும் தாளமானங்களை,
திதி திருநடனத்தால் காக்கின்ற
தாதை பரமசிவனும்
தாத பிரமனும்
துத்தி படப்பொறியினையுடையதத்தி பாம்பினுடைய
தா இடத்தையும்
தித நிலைபெற்று
தத்து ததும்புகின்ற
அத்தி சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி தயிரானது
தித்தித்ததே தித்திக்கின்றதென்று
து உண்ட கண்ணனும்
துதித்து துதி செய்து வணங்குகின்ற
இதத்து பேரின்ப சொரூபியான
ஆதி முதல்வனே!
தத்தத்து தந்தத்தையுடைய
அத்தி அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத தொண்டனே!
தீதே தீமையே
துதை நெருங்கிய
தாது சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து மரணத்தோடும்
உதி ஜனனத்தோடும்
தத்தும் பல தத்துக்களோடும்
அத்து இசைவுற்றதுமான
அத்தி எலும்புகளை மூடிய
தித்தி பையாகிய இவ்வுடல்
தீ அக்கினியினால்
தீ தகிக்கப்படுகின்ற
திதி அந்நாளிலே
துதி உன்னைத் துதிக்கும்
தீ புத்தி
தொத்தது உனக்கே அடிமையாகவேண்டும்

இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் திதத்தத்தத்என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை மடக்குஅல்லது யமகம்என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை அந்தாதிஎன்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.


உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

( என் நண்பனின் மடிக்கணினியில் படித்தது )
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff